Tuesday, October 12, 2010

சிங்கை வாழ் தமிழ் நெஞ்சங்களே..

சிங்கப்பூர் தேசிய் நூலகம் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலை தனது கிளைகளில் இடம் பெறச்செய்திருக்கும் சந்தோசமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு இலங்கை எழுத்தாளனின் படைப்புக்கு அவர்கள் காட்டியிருக்கும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி.

பின்வரும் நூலககிளைகளில் எனது நாவலை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.

1 Ang Mo Kio Public Library Adult Lending Tamil
2 Bedok Public Library Adult Lending Tamil BAL On Loan 02/10/2010
3 Bukit Merah Public Library Adult Lending Tamil
4 Choa Chu Kang Public Library Adult Lending Tamil
5 Geylang East Public Library Adult Lending Tamil
6 Jurong Regional Library Adult Lending Tamil
7 Marine Parade Public Library Adult Lending Tamil
8 Sembawang Public Library Adult Lending Tamil
9 Woodlands Regional Library Adult Lending Tamil

Thursday, October 7, 2010

இணையத்தில் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்


இணையத்தில் எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்கள்" பற்றிய கருத்துக்களை பின்வரும் தளங்களில் பதிவு செய்த கானாபிரபா,சயந்தன், கரவைக்குரல், தமிழ்கலைஞன், குரு அரவிந்தன், அகில், வல்வை சாகரா ஆகியோருக்கு நன்றி.

மடத்து வாசல் பிள்ளையாரடி இணையத்தளம்

சாரல் இணையத்தளம்

கரவையின் குரல்

கரும்பு வலைப்பூ

தமிழமுதம்

தமிழ் படைப்பாளிகள் தளம்

திண்ணை

Friday, October 1, 2010

"தூறல்" பெருக்கின்றது....


"தூறல்" பெருத்தால் அது மழைதான்..!

கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது.

இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான்.

அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது.

இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி என்று அறியப்பட்டவர்கள் யாவரும் எழுதுகிறார்கள்.

முதலாவது இதழில் இருந்து "என் மனவானில்" என்ற எனது நினைவுத்தொடர் கட்டுரை வருவது தனிச்சந்தோசம்.

"தூறல்" சஞ்சிகைக்கு பொறுப்பானவர்களின் கைகளைப் பற்றி உற்சாகமாக குலுக்க விருப்பமாகவிருக்கிறது. விளம்பரதாரர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தால் "தூறல்" பெருமழையாகி, எங்களை ஆனந்தம் கொள்ளவைக்கும்..

பிரதம ஆசிரியரான ராஜ்மோஹன் செல்லையாவுக்கு ஒரு பூங்கொத்து. பிடியுங்கள்.

Wednesday, September 15, 2010

வாடைக்காற்று திரைப்படத்தை தேடிய கதை





அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார்.

இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.

சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா?

செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எடுக்கப்பட்டு இலங்கையின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் திரையிடப்பட்டு, தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய ஊர்களிலும் காண்பிக்கப்பட்டு, ஓய்ந்துவிட்டகாலம்.

1978ல் வெளிவந்த சிறந்த தமிழ்ப்படம் என்ற இலங்கை ஜனாதிபதிவிருது வாடைக்காற்றுக்கு கிடைத்தது. அத்துடன் சிறந்த துணைநடிகர்விருது, இதில் நடித்த எஸ்.ஜேசுரத்தினத்துக்கு கிடைத்தது. அத்தோடு திரைப்படத்தில் முதலீடு செய்த பெனின்சுலா கிளாஸ்வேக்கஸ் மகேந்திரன், சீமாஸ் ரெக்ஸரைல்ஸ் குணரத்தினம் இருவரும், தயாரிப்பளராக செயற்பட்ட சிவதாசனும் 'வாடைக்காற்றை' முற்றாக மறந்துவிட்டார்கள்.

1983ம் ஆண்டில்; தமிழர்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபொழுது, தமிழர்களின் வர்த்தகஸ்தாபனங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஹெந்தளையில் இருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோ' வும் அடங்கும். இங்குதான் ஏராளமான சிங்கள,தமிழ்ப் படங்களின் 'நெகட்டிவ்'கள் வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரூடியோ எரிந்து சாம்பலாகியது.

வாடைக்காற்று நாவலை வாசித்தகாலத்தில் இருந்தே, அதன் மீது மையல்கொண்டு, அதிஷ;டவசமாக அது திரைப்படமாகியபொழுது, எனக்கு மிகவும் பிடித்த 'விருத்தாசலம்' என்ற காட்டுவாசியான இளைஞன் பாத்திரத்தில் நான் நடிக்கக்கிடைத்ததும், விமர்சனங்களில் மிகுந்த பாராட்டுக்களைப்பெற்றதும் ஒரு சந்தோசமான அனுபவம். கூடவே அதன் உதவி இயக்குனர் என்ற ரீதியில் அதன் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தியவன் என்ற வகையிலே என்னால் 'வாடைக்காற்றை' மறக்கமுடியவில்லை.

கலவரங்கள் ஓய்ந்தபின் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு போனேன். தமிழோ, சிங்களமோ திரையிடப்படுவதற்கு திரைப்படப் பிரதிகளை அவர்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும். அவர்கள்தான் பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள். ஓடிமுடித்தபின் பிரதிகள் அவர்களிடம்தான் வந்துசேரும். எனவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டுபிரதிகளில் இரண்டொன்றாவது இருக்காதா என்ற நம்பிக்கையுடன் போனேன். அங்கு எனக்கு கிடைத்த பதில்தான் விசித்திரமானது. ஒருபிரதியும் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். எனக்கு சரியான ஆத்திரம்.

அக்காலத்தில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தலைவராக பணியாற்றிய எல்.பியசேனா எனக்கு அறிமுகமானவர். உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். நேரே அவரிடம் சென்று முறையிட்டேன். 'ஜனாதிபதி விருது' பெற்ற ஒரு சிறந்த தமிழ்ப்படத்தின் ஒரு பிரதியைக்கூட சேமிப்பில் வைக்கமுடியாமல் போனதென்ன' என்று கேட்டேன். அவர் எனக்கு எப்படியாவது ஒரு பிரதியை தேடிக்கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.

திரைப்படக்கூட்டுத்தாபன சிற்றூழியர் ஒருவர் ரகசியமாக ஒரு தகவலைத்தெரிவித்தார். திரைப்படசுருள்களின் ஓரத்திலே இருக்கும் வெள்ளிக்காக தயாரிப்பாளர்கள் கைவிட்ட திரைப்படங்களை நிறைக்கணக்கில் அங்குள்ளவர்கள் விற்றுவிட்டு 'அழிக்கப்பட்டது' என்று கணக்கை முடித்துவிடுவார்களாம். 'முக்கியமாக இலங்கையில்தயாரான தமிழ்ப்படங்களுக்கு இப்படி நடக்கிறது. அவற்றின் தயாரிப்பாளர்களும் அக்கறை எடுப்பதில்லை. அது இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. நீங்கள் விடாதீர்கள்' என்று சொல்லிமுடித்தார்.

நான் விடவில்லை. அடிக்கடிபோனேன். கடைசியில் ஒரு தகவல் கிடைத்தது. 83ல் எரிந்து கொண்டிருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோவில்' இருந்த சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் 'நெகட்டிவ்'களை காப்பாற்றும் முயற்சியில், எரிந்தது பாதி, எரியாதது பாதியாக இருந்த எல்லாவற்றையும், தூக்கி ஏற்றிக்கொண்டு போய், களனியாவில் இருக்கும் அரசாங்க ஸ்ரூடியோவான 'சரசவிய'வில் குவித்து வைத்திருக்கிறார்கள். உம்மால் முடியமென்றால் அங்கேபோய் தேடி, உமது படத்தின் நெகட்டிவ் இருந்தால் திரைப்படக்கூட்டுத்தாபனமே ஒரு பிரதி எடுத்துத்தரும் என்று உறுதியளித்தார்கள்.

;சரசவிய' ஸரூடியோவிற்கு யாரை துணைக்கு கூட்டிக்கொண்டு போவதென்று யோசித்தேன். அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தவர், சிங்களத்திரைப்டங்களில் வில்லன்பாத்திரங்களில் நடிக்கும் றொபின் பெர்னாண்டோ என்ற நண்பர். நாங்கள் இரண்டுபேரும் சமகாலத்தில் தயாரான 'நாடு போற்ற வாழ்க' 'அஞ்சானா' திரைப்படங்களில் நடித்திருக்கிறோம். அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

'சரசவிய'வில் ஒரு பெரிய அறையை திறந்து காட்டினார்கள். குவியலாக திரைப்படச்சுருள்கள், தகரங்களில் அடைக்கப்பட்டும் வெளியேயுமாக கிடந்தன. போதாக்குறைக்கு உருகிபபோய் பழுதான திரைப்படச்சுருள்களின் 'நெடி' தாங்கமுடியாமல் இருந்தது. மூக்கின்மேல் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, நானும், றொபினும், இன்னுமொரு சிற்றூழியருமாக தேடினோம்.

ஒவ்வொன்றாக 'வாடைக்காற்று' திரைப்படத்தின் நெகட்டிவ்கள் தகரஉறையுடன் எங்கள் கைக்கு வந்தன. ஏறக்குறைய 16 நெகட்டிவ் சுருள்கள். சந்தோசம் எங்கள் மனதில் பொங்கிவழிந்தது. தொடர்ந்து தேடியதில், சினிமாஸ் ஸ்ரூடியோவில் மேலதிகமாக செய்வித்த ஒரு பிரதியின் அத்தனை சுருள்களும் அகப்பட்டன.

நண்பர் றொபின் பெர்னான்டோ, பிரதியையும், நெகட்டிவ் சுருள்களையும் கொண்டுவந்து நான் அப்போது தங்கியிருந்த வை.எம்.சி.ஏ விடுதியில் இறக்கிவிட்டுப்போனார். எனது அபிமானத்திரைப்படம் இப்படியாக எனது கைக்கு வந்தது.

Tuesday, September 7, 2010

குரு அரவிந்தனின் "புதிய பக்கம்"



"புதிய பக்கம்" என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் இணயத்திற்கும் தனது புதிய பக்கத்திற்கு வந்திருக்கிறார்.

குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர்.

தாங்கள் எழுதியா "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை.. அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி..

ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


ஒரு பக்கக்கதை, இரண்டு ப்க்கக்கதை போடுவதற்கே (இடம் இன்மையால்) சிரமப்படும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகையில் இவர் எழுதியா முழு நீள நாவலே ("நீர் மூழ்கி..நீரில் மூழ்கி"), ஒரே இதழில், புகழ்பெற்ற ஓவியர்கள் நாலைந்து பேரின் சித்திரங்களுடன் வெளியானது நம்மவரில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் தென்னிந்தய வாசகர்கள் பல ஆயிரம் பேருக்குத் தெரியும்

ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் எழுதினால் தாழ்வான காரியமா?. ஜெயகாந்தன், ஜெயந்தன், கல்கி, சாண்டில்யன், அகிலன் எல்லோரும் இந்தப்பத்திரிகைகளில் எழுதித்தானே வாசகர்களிடம் அபிமானம் பெற்றார்கள்.

நாலே நாலு இதழ்கள் வெளிவந்து சொல்லாமல் கொள்ளாமல் நின்று போய்விடும் "இலக்கியச் சிற்றிதழ்களில்" எழுதினால் தான் எழுத்தா? எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது?

அண்மையில் ஒரு கலை இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கையின் ஒரு பிரபல கவிஞ்ர் தனது கவிதையை யாராவது " என்னய்யா.. உங்கள் கவிதை ஒன்றுமே புரியவிலையே" என்றவுடன்,ஒரு மமதை சிரிப்பு சிரிப்பாராம், "அப்படித்தான்.. என் கவிதை உங்களுக்கு எல்லாம் புரியாது" என்பதுபோல..
அவர் யாருக்காக எழுதுகிறார் எனபது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

குரு அரவிந்தனின் இணயப் பக்கம் அவரது வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள் உடன் இணையத்திற்காகவே எழுதப்பட்ட படைப்புகளுடன் சிறப்பாக இருக்கின்றது. தொடர்ந்து இணையத்திலும் நிறைய எழுதுங்கள் குரு.

Wednesday, September 1, 2010

சாயாவனம் - நாவல் மீள்வாசிப்பு


சாயாவனம் ஒருநாளில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய நாவல்தான். 200க்கு குறைந்தபக்கங்கள்தான். ஆனால் அதை வாசித்து முடிந்தபின் நாவலாசிரியர் பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதைப் போல, "வாசித்தவர் மனதில் இன்னுமொரு நாவல் ஆரம்பிக்கிறது"

நாவலின் கதாநாயகன் காடுதான். அதனோடு அதை அழிக்கப்புறப்படும் மனிதனின் இடையறாப் போராட்டமே கதை. இதேபோலத்தான் ஏர்னேஸ்ட் ஹேமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் கிழவனுக்கு பெரிய மீனுடன் கடலுக்குள் நடைபெறும் போராட்டமும். நீயாநானா என்ற நிலை இறுதிவரை தொடர்கிறது.

இந்த இரண்டு சிறந்த நாவல்களுக்கிடயில் சுவையான ஒற்றுமைகள் இருப்பதை அவதானித்தேன். "கடலும் கிழவனும் (The Oldman and the Sea)" நாவல்கூட127 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். சா.கந்தசாமியின் முதல் நாவல் "சாயாவனம்". இதற்காக அவருக்கு சாஹித்ய விருது கிடைத்தது. ஹேமிங்வே எழுதி வெளியிட்ட கடைசி நாவலும், புகழ் ஏணியில் ஏற்றிய நாவலும் -"கடலும் கிழவனும்' தான். இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஹேமிங்வேயின் நாவலில் சான்ரியாகோ என்ற மீனவக்கிழவன் 84 நாட்களாக பெரிய மீன் எதுவும் அகப்படாமல், துணைக்கு வருபவர்களும் கைவிட்டுவிட 85வது நாள், சாதிக்கவேண்டும் என்ற வன்மத்துடன் கடலில் இறங்குகிறான். பிரம்மாண்டமான மீன் ஒன்று அவனது தூண்டிலில் சிக்குகிறது..பிறகென்ன..போராட்டந்தான். இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் இப்படியே கரைகின்றன. தன்னோடு மூர்க்கமாக போராடும் அந்த ராட்சச மீன்மீது கிழவனுக்கு இனம்புரியாத மதிப்பே உருவாகுகின்றது.இதேபோல "சாயாவனத்தில்"தன்முன்னே பரந்துநிற்கும் காட்டைப் பார்த்து சிதம்பரம் பிரமித்து, மதிப்பே கொள்கிறான்.

மீனை இறுதியில் கொன்றுவிட்டாலும், பெரும் சுறாக்கள் அதன் இறைச்சியை கைப்பற்றிக்கொள்ள மீனின் வெறும் எலும்புக்கூட்டுடன் கிழவன் கரைக்கு வருகிறான்.
சாயாவனத்தில் காட்டின் ஒருபகுதியை அழித்து ஆலை போடுவதுதான் சிதம்பரத்தின் நோக்கமாக இருந்த்தது. ஆனால் அவன் இட்ட தீ, அவன் கட்டிய வீடு உட்பட எல்லாவற்ரையுமே பொசுக்கிவிடுகிறது. இயற்கையின் ஒரு கூறு அவனை தோற்கடித்து விடுகிறது.

சாயாவனத்தில் சிதம்பரத்துக்கு துணையாகவரும் சிறுவன் கலியபெருமாளைப் போலவே, கடலும் கிழவனும் நாவலில் கிழவனுக்கு துணையாக ஒரு சிறுவன் வருகிறான். அவனது பெயர் மனோலின் (Manolin).

சா.கந்தசாமியின் இந்த நாவலை மீண்டுமொருமுறை வாசித்தபொழுது ஒரேமூச்சில் வாசித்து முடிக்கும் ஆவலைத் தந்தது, மனிதரின் காலடிகள் பட்டிராத பகுதிகளுடன் தன்னிச்சையாக ஓங்கி வளர்ந்தமரங்களுடன்,செடி கொடிகளுடன், மூங்கில் காடுகளுடன், ஜீவராசிகளுடன் அந்த காட்டை அவர் அறிமுகம் செய்து வைத்த பாங்கு. அந்தமரங்களின் தனித்தன்மைகள், அந்த ஊர்மக்களுக்கு அந்தகாடு வழங்கிய வளங்கள், மிருகங்கள், பறவைகள்,காட்டில் தனிக்காட்டு ராஜவாக வாழ்ந்த முரட்டு குழுமாடு எல்லாமே மனிதன் மூட்டிய தீயினால் கருகிப்போன சோகம்.

புளியைதரும் மரங்களை அழித்து இனிப்பான வெல்லம் தரும் ஆலையை சிதம்பரம் நிறுவினாலும், புளிப்புக்கு பதிலாக இனிப்பு தரமுற்படும் அவனை ஒரு மூதாட்டி கோபிப்பதோடு நாவல் முடிவது ஒரு முரண்நகை.

1965ல் எழுதப்பட்ட இந்த நாவலில் பல ஆண்டுகளுக்கு முந்திய நமக்கு பழக்கமில்லாத ஒரு பண்டமாற்று சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையை காண்கிறோம். தஞ்சை மாவட்டத்தின் பின்னணியில்,காவிரியின் கரையில் நிகழும் கதை. சிதம்பரம்,சிவனாண்டிதேவர், பாப்பா, பஞ்சவர்ணம், குஞ்சம்மா, கலியபெருமாள் யாவருமே தெளிவான அடையாளங்களுடன் மனதில் பதிந்து போகிறார்கள். இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த அவர்களை நினைக்க பொறாமையாக இருக்கிறது.

சாயாவனம் என்மனதில் சாயாமல் நிமிர்ந்தே நிற்கிறது. தமிழ் படைப்பிலக்கியத்தின் ஒரு 'Classic'தான்.

Sunday, July 25, 2010

தேரோட்டி மகனும் நானும்



எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது.

இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பி.எஸ்.ராமையா

இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன்.

சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டிமகன் நாடகத்தில் சகாதேவனாக சிறிய பாத்திரத்தில் நடித்த கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் இவ்வாறு தன் அனுபவத்தை கூறுகிறார்.

'1959-ல் பி.எஸ். ராமையா எழுதிய ''தேரோட்டி மகன் '' சேவாஸடேஜ் தயாரிப்பில் உள்ளூர் -வெளியூரெங்கும் பிரபலமாகி..கொடி கட்டிப் பறந்தது.. எஸ். வி. சகஸ்ரநாமம் கர்ணனாகவும் முத்துராமன் துரியோதனனாகவும் பாத்திரமேற்று சிறபபாக நடித்தார்கள்..நான் மூன்று .சீன்களில் ''தலை ' காட்டும் சகாதேவனாக நடித்தேன்..அதிர்ஷ;டவசமாக ஒரு அருமையான மருதகாசியின் பக்திப் பாடலை முதல் .சீனில் பாடி வாயசைத்து கிருஷ;ணனை கட்டிப் போடுவது என் பங்கு சாதனையாக வாய்த்தது. .கிருஷ;ணனை எஸ்.வி.கோபாலகிருஷ;ணனை கட்டிப் போட்டு திரை விழுந்து விளக்கணைந்ததும் கொட்டகையில் தவறாமல் கிளம்பும் பயங்கர கரகோஷ ஒலி.. என் நடிப்புத் திறமையில் அதிக நம்பிக்கையற்ற எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது... புராண நாடகங்கள் இந்த வகையில் நடிகனுக்கு ஒரு வசதியான வாய்ப்பு என்று தோன்றியது...சனங்கள் ஒரு ராமனையோ, கிருஷ;ணனையோ உடனே நம்பி விடுகிறார்கள்'

தேரோட்டிமகன் நாடகத்தை கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வௌ;வேறுபாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். அவருடன் அவரது நாடகக்குழுவைச்சார்ந்த ஏ.ரகுநாதன், குழந்தை சண்முகலிங்கம், எஸ்.ரி. அரசு ரி.ராஜகோபால் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

பின்னர் ஏ.ரகுநாதன் அவர்களே தேரோட்டிமகன் நாடகத்தை பலதடவைகள் மேடையேற்றினார். இவர் காலத்துக்கு காலம் இந்நாடகத்தில் பல சிறந்த கலைஞர்களை இணைத்துக்கொண்டார். இலங்கைவானொலியின் பிரபல அறிவிப்பாளர் திருமதி இராசேஸ்வரி சண்முகம் சிலமேடையேற்றங்களில் குந்தியாக நடித்து தன்சோகநடிப்பினால் பார்வையாளர்களை கண்ணீர் சிந்தவைத்த நினைவுகளை ரகுநாதன் அவர்கள் என்னோடு பங்கிட்டுக்கொண்டிருக்கிறார். இன்னுமொரு மறக்கமுடியாத கலைஞர் ரி.ராஜேஸ்வரன். இந்hடகத்தில் கர்ணனுடைய மாமன்பாத்திரத்தில் நடிப்பதைப்பார்த்திருக்கிறேன். இவர் இலங்கையின் ஆரம்பகால திரைப்படங்களில ஒன்றான 'டாக்சி டிரைவர்' திரைப்படத்தின் கதாநாயகள்.

1974ம் ஆண்டில் மார்கழிமாதத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி;, கிளிநொச்சி அரசினர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் ஆகிய அரங்குகளில் மூன்றுநாட்கள் அடுத்தடுத்து தேரோட்டிமகன் அரங்கேறியபோது நானும் இணைந்துகொண்டேன். அனேகமாக நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை முதன்முதலாக ஒரு இதிகாசநாடகத்தில் அதுவும் கண்ணன் பாத்திரத்தில் நடிக்கவைத்தார் ரகுநாதன் அண்ணன்.

எனக்கு இது புது அனுபவமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தாலும், ஒப்பனை, ஆடை அலங்காரம், பேச்சு நடை, நடிப்புப்பாணி என்று பலவிதத்திலும் மாறுபட்ட இந்த நாடகத்தில் அதுவும் கிருஷ;ணன் பாத்திரத்தில்; நான் சோபிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கவே செய்தது. (ஆமாம்.. மயிலிறகும், வேய்ங்குழலுமாக நீலவண்ணனாக வரும் கண்ணன்தான்.)

இருந்தாலும் என்னால் முடியும் என்று நம்பிக்கையை தந்த ரகுநாதன் அதற்கான ஒரு சுவையான காரணத்தையும் சொன்னார். பொதுவாக இத்;தகைய கண்ணன், ராமன் போன்ற தெய்வப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சற்றுப் பெண்மைச்சாயல் உள்ளவர்களாக இருக்கவும் வேண்டும். ஏற்கெனவே நான் ஒரு நகைச்சுவை நாடகத்தில் (புளுகர் பொன்னையா) ஒரு காட்சியில் பெண்வேடத்தில் வந்து அசத்தியிருக்கிறேன் என்பதையும் ஞாபகப்படுத்தினார். அத்தோடு மீசை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டார்.

என்ன செய்வது.. கருகருவென்று வளர்ந்திருந்த எனது இளமைக்கால மீசையை தியாகம் பண்ணத்துணிந்து விட்டேன். ஆனாலும் அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதாவது ஒப்பனை செய்துகொள்வதற்கு சற்றுமுன்னதாகத்தான் மீசைக்கு விடைகொடுப்பேன் என்பதுதான் அது. இது ஒவ்வொரு முறை மேடையேற்றத்தின்போதும் நடந்தது. மீசை வளர்வதும், மறைவதுமாய் தொடர்ந்தது.

ஆந்த நாடகத்தில் என்னோடு நடித்தவர்களில் அனேகர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள். அத்தோடு அக்கால இசைநாடகங்களில் அனேகமாக பெண்வேடங்களில் ஆண்களே நடிப்பார்கள். அதேபோல எங்கள் நாடகத்திலும்; முக்கிய பெண் பாத்திரமான 'குந்தி' வேடத்தில் நடித்தவர் ஒரு ஆண்கலைஞர். (பிரான்சிஸ் ஜெனம்.(வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்தவர்) இதைவிட எங்களுக்கு ஒப்பனை செய்தவர் மிகநீண்டகாலமாக ஒப்பனைசெய்வதில் பிரக்யாதி பெற்றிருந்த சாமுவேல் பெஞ்சமின் என்பவர்.

அவர் ஒப்பனை செய்வதற்கு 'அரிதாரம்' என்ற சுண்ணாம்பு கலந்த பொருளையே (முத்துவெள்ளை என்பார்கள்) பாவித்தார். அதை பூசியபின் நேரம் செல்லச்செல்ல பூச்சு காய்ந்து கொண்டேபோகும், நாடி. நரம்புகளெல்லாம் பற்றி இழுப்பதுபோல, எனக்கு இருந்தது. தலைநகர் நாடகங்களில் எங்கள் ஒப்பனை என்பது மெல்லிய பூச்சுதானே.

பட்டுச்சேலையால் தார்ப்பாய்ச்சி உடுத்தி, கண்இமைக்கு கீழான சிறுபகுதி, உதடுகள், உள்ளங்கை, உள்ளங்கால் (இவற்றுக்கு சிவப்பு வர்ணமும்) இவை தவிர்ந்த, உடம்பின் மேற்பகுதி, கெண்டைக்கால் என்று முழுவதும் பச்சை வர்ணத்தால் பூசிவிட்டார்கள். நீலவண்ணன் அல்லவா.. எதற்கு பச்சை நிறம் என்று கேட்டதற்கு, நீலம் பூசினாhல் மின்சாரஒளியில் நிறபேதம் அடைந்து கறுப்பாகத்தெரியுமாம். ஆனால் பச்சை வர்ணம், அப்படி பேதமடையும்போது நீலவண்ணம் காட்டுமாம் என்றார்கள். அது உண்மையாகத்தான் இருந்தது. ஒப்பனை முடிந்தபின் ஏறக்குறைய பஞ்சவர்ணக்கிளி போல இருந்தேன்.

இத்தனையும் போதாதென்று கைகளில் அலங்காரப்பட்டிகள், கழுத்தில் மணிமாலைகளுடன், முழங்கால் வரை தொங்கும் பெரிய மலர்மாலை (நிஜமானதுதான்), கையில் நீண்ட புல்லாங்குழல் (சிறிதாக இருந்தால் ஏதோ குச்சி என்று நினைத்துவிடுவார்களே), கடைசி கடைசியாக மயிலிறகுகள் பொருந்திய கிரீடம் (மட்டையோ, தகரமோ) ஒன்றையும் தலையில் வைத்து விட்டார்கள். ஏதோ என் தலைக்கு அளவாக 'மெத்தென்று' சுகமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மகா. மகா, தவறு. ஆந்த முடி கழன்று விடாமல் இருப்பதற்காக அதில் பொருந்திய கம்பிகளை முறுக்கி இறுகக் கட்டிவிட்டார்கள். சிறிதுநேரத்தில் நெற்றி நரம்புகளெல்லாம் புடைத்து பெரிய தலைவலியே ஆரம்பித்து விட்டது. இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு விடியவிடிய நடைபெற்ற கூத்துகள், இசைநாடகங்கள் என்பனவற்றில் நடித்த எனக்கு முந்திய காலத்து நடிகர்களை ஒருமுறை நினைத்துக்கொண்டேன்.

ஓப்பனையெல்லாம் முடிந்து சககலைஞர்கள் முன்னால் போய் நின்றபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் எனது வேதனையை விரட்டியடித்தன. தென்னிந்திய சினிமாவில் நிரந்தர ராமராக, கிருஷ;ணனாக தோன்றிப் புகழ்பெற்ற என். ரி. ராமராவ், நரசிம்மபாரதி (1948ல் 'அபிமன்யு' படத்தில் கிருஷ்ணராக நடித்தவர். எம்.ஜீ.ஆர் தான் இதில் அருச்சுனன்) ஆகிய இரு நடிகர்களுக்குப் பிறகு, கிருஷணன் வேடம் எனக்கு பொருந்தி வந்திருக்கிறதென்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள். (ரகுநாதன் பத்திரிகைக் குறிப்பொன்றில் பின்னர் இதைக்குறிப்பிட்டிருந்தார்.)

யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி போன்ற இடங்களில் மேடையேறியபோது 'கிருஷ்ணனின் நிரந்தரப்புன்னகையை, உரையாடலை, கள்ளத்தனமான பார்வையை ரசிகர்கள் வரவேற்கவே செய்தார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம்.

தொடர்ந்து 1976ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றம். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த நாடகம் வந்திருக்கிறதென்பதினால் நல்ல கூட்டம். எனக்கு அறிமுகமான பல (கொழும்பு வாழ்) கலைஞர்கள் வந்திருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு நான் இந்த நாடகத்தில்; நடிக்கிறேன் என்று தெரியாது. போதும் போதாதற்கு மீசை இல்லாத முகம், பச்சை வர்ணப்பூச்சு. என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நாடகம் ஆரம்பித்தது. தொடக்கத்தில் இருந்தே நாடகம் பார்வையாளர்களுக்கு பிடித்துப்போயிருக்கவேண்டும். ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான கட்டம். கவிஞர் வைத்தீஸ்வரன் சொன்ன அதே கட்டந்தான். மகாபாரதப்போரை நடத்துவதா, இல்லையா என்பதுபற்றி கண்ணன் பாண்டவர்களின் அபிப்பிராயத்தை ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டுவருகிறார். மதியூகியான சகாதேவனிடம் கேட்டபொழுது, அவன் இப்படிச்சொல்கிறான்.

பாரதப்போர்வராமல் தடுப்பதற்கு உன்னைக் கட்டிப்போட்டால் சரியாகும் என்பதாக கிருஷ;ணனைப் (என்னைப்) பார்த்துச்சொல்கிறான்.

'கண்ணா.. உன்னை கட்டிப்போடுவேன்'

'சகாதேவா.. ஆகட்டும்.. அப்படிச்செய்.. பார்க்கலாம்'

'கண்ணா.. உன்னைவிட இலகுவாக வசப்படக்;கூடிய பொருள் சக்தி வேறு ஒன்றுமில்லை'

என்று சொல்லி சகாதேவன் முழங்காலில் நின்றவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்.

''நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்

பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி

மா பாரதம் அகற்ற மற்ற் ஆர் கொல் வல்லாரே''
– வில்லிபாரதப்பாடல் இது.

(இந்தப்பாடலை மேடையில் பாடியவர் அண்மையில் மறைந்த சிறந்ததொரு பாடகரான திலகநாயகம் போல். சகாதேவனாக நடித்தவர் ஹரிதாஸ். 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தில் நடித்தவர்.)

கிருஷ்ணன் அப்படியே கட்டுண்டு நின்று மந்தஹாசம் செய்கிறார். (மந்தஹாசம் என்ற புன்னகை எப்படி செய்யவேண்டுமென்று இயக்குனர் ரகுநாதன் எனக்கு தனிவகுப்பே நடத்தினார்), அந்தக்காட்சியின் தன்மை, ஒலிக்கும் இனிய பாடல் - நான் மெய்மறந்ததுமாதிரி புன்னகை தவள நிற்கிறேன். அரங்கில் உள்ளவரும் கிறங்கிப்போய் இருக்கிறார்கள்.

முன்வரிசையில் என் பார்வை ஓடுகிறது. கவிஞர் சில்லையூர் செல்வராசன் அருகில் அவரது இளம்மனைவி கமலினி செல்வராஜன். (கமலினி அக்காலத்தில் பிரபல வானொலித்தொடர் நாடகமான 'தணியாத தாக'த்தில் எனது தங்கை கமலியாக நடித்துக்கொண்டிருந்தவர்) என் மனதில் குறும்பான ஒரு எண்ணம் வந்தது.

அதே மந்தஹாசப்புன்னகையுடன் சபையை அரைவட்டத்தில் பார்வையிட்டு வரும்போது, கமலினியைத் தாண்டும்போது கண்களை சிமிட்டினேன். கமலினி திடுக்கிட்டுப்போய் தன் கணவரிடம் (சில்லையூராரிடம்) ஏதோ குனிந்து சொல்வது தெரிந்தது. யாரோ தெரியாதவன் இப்படிச்செய்கிறான் என்று அவர்களுக்கு கோபம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அதேமாதிரி அரைவட்டத்தில் முகம் திரும்பும்போது – அதே கண்சிமிட்டல். அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நாடகம் தொடர்கிறது.

கண்ணன் ஒன்று போல பல வடிவங்களைக் காட்டினான். ஆனாலும் பெரும் ஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தால் மூலவரை அடையாளம் கண்டு, அவரைத் தன் மனதினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

சகாதேவன் மனதின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன், 'கட்டுணடேன் சகாதேவா. உன் அன்புத்தளையில் கட்டுண்டேன். என்னை விட்டுவிடு' என்று கெஞ்சுகிறார்.

':நீங்கள் இப்படிச்செய்தால் விட்டுவிடுகிறேன்.' என்று நிபந்தனை விதிக்கிறான் சகாதேவன்.

'வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வையால் காக்கவேண்டும் நெடுமாலே'

கண்ணன் சொல்கிறார். ஓம்..

(என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு "ஓம்' என்று உரைத்தருளி..)

(இந்த இடத்தில் புலவர் கீரனின் 'வில்லிபாரத சொற்பொழிவு என் ஞாபகத்திற்கு வருகிறது. சகாதேவன் வேண்டுகோளுக்கு கண்ணன் சொன்ன பதில் ::ஓம்' என்றுதான் வில்லிபாரதத்தில் வருகிறது. கூடவே இலங்கைத்தமிழர்களாகிய நாங்கள் 'ஓம்' என்ற அந்தச்சொல்லையே பாவிக்கிறோம் என்று கூட்டிக்காட்டுகிறார்.)

நாடகம் முடிந்ததும், முடியாததுமாக சில்லையூரார் யாரிடமோ கேட்டு கண்ணனாக நடித்தது நான்தான் என்று அறிந்திருக்கிறார். இந்தச்சிக்கல் இப்படி சுமுகமாக முடிந்தாலும் வேறோரு சிக்கல் எனக்காக ஒரு ரசிகர் வடிவில் காத்திருந்தது.

அவர் ஒரு கிருஷ;ணபக்தராக இருக்கவேண்டும்.. 'பளிச்'சென்ற வெள்ளை உடுப்பு அணிந்திருந்தார். 'கண்ணா..உன்னைக் கட்டி அணைக்கப்போகிறேன்' என்று அடம் பிடித்துக்கொண்டு நின்றார். 'ஐயா. எனக்கு ஆட்சேபணை இல்லை.. ஆனால் .உங்கள் வெள்ளை உடுப்பெல்லாம் பச்சையாகி விடுமே' என்று நான் சொல்லித்தான் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கிருஷ்ணனை (என்னை) கட்டி அணைத்து விட்டு 'பச்சைமாமலைபோல் மேனி' யாளனாகச் சென்றார். அவரது வீட்டில் ;வரவேற்பு' எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நாடகத்தில் என்னுடன், பிரபல நாடகாசிரியர் குழந்தை சண்முகலிங்கம் (அருச்சுனன்), ஏ.பிரான்சிஸ் ஜெனம் (குந்தி), ரி.ராஜேஸ்வரன் (சார்த்தகேசி), சிவபாலன் (துரியோதனன்), ஹரிதாஸ் (சகாதேவன்) போன்றோர் அற்புதமாக நடித்தார்கள்.

என்கலைவாழ்வில், மறக்கமுடியாத திருப்பத்திற்கு காரணமானவரை எப்படி மறக்கமுடியும். 'தேரோட்டி மகனை'த்தான் சொல்கிறேன். தேரோட்டி மகனாக (கர்ணனாக) களகச்சிதமாக நடித்து, எங்களையும் இயக்கியவர்;, பவளவிழா நாயகன் ஏ.ரகுநாதன் அவர்கள்தான்.

"சுட்ட பழ்மும் சுடாத மண்ணும்' - ஏ.ரகுநாதன் பவள்விழா (ஜூலை 25, 2010)மலருக்காக எழுதியது)