Thursday, December 17, 2009

எனது நாவல் பற்றிய செய்திகள்

குமுதம் - தீராநதியில் முதல் கட்டுரை
தினக்குரலில் முழுப்பக்கப் பேட்டி
ஞானம் சஞ்சிகையில் விளம்பரம்








தினக்குரல் பேட்டி -



(பேட்டி- சிறீரஞ்சனி)


1. நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அல்லது உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

பொதுவாகவே படைப்பாளிகள் கவிதையில்தான் ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து சிறுகதைகள், பின்னர் நாவல் என்று தொடரலாம். என்னைப்பொறுத்தவரையில் கவிதை எழுதுவதில் எனக்கு நாட்டம் இருக்கவேயில்லை. நல்ல கவிதைகளை வாசிப்பதில், மனதில் பதிவுசெய்து கொள்வதில் நான் காட்டிய விருப்பம், மோகம் என்றே சொல்லலாம். படைப்பதில் ஏனோ இருக்கவில்லை. பல நாடகங்கள், சில சிறுகதைகளுக்குப் பிறகு நேரடியாக நாவல் எழுதப்புறப்பட்டு விட்டேன். கடலோடிகளின் வாழ்வு என்றுமே எனக்கு கவர்ச்சியானதாகவிருந்தது. நான் இளைஞனாக விரும்பி வாசித்த நாவல்களான ஆங்கில எழுத்தாளர் ஏணெஸ்ற் ஹேமிங்வேயின் “கடலும் கிழவனும்”, மலையாள எழுத்தாளர் தகழிசிவசங்கரம்பிள்ளையின் “செம்மீன்” - இரண்டையுமே நான் மொழிபெயர்ப்பாகத்தான் வாசித்தேன். அவை எனது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினால், ஐதீகங்கள், நம்பிக்கைகள, போராட்டங்கள்; நிறைந்த அவர்கள் வாழ்வின் தனித்துவத்தை வெறுமனே சிறுகதையில் பதிந்துவிடும் சாத்தியம் இல்லை என்று எனக்கு பட்டதினால் நீண்டநாவலாக படைத்தேன்.

2. ஏதாவது சிறுகதைகள் முன்பு எழுதி இருக்கிறீர்களா? அதில் நினைவில் நிற்கும் ஒரு கதையின் கரு என்னவாயிருந்தது எனச் சொல்லமுடியுமா?

நான் அதிகம் எழுதிக்குவிக்கவேண்டும் என்ற மனவிசாரத்துக்கு எப்போதுமே உட்படாதவன். எப்போதாவது ஒரு பொறியாக, மின்னற்கீற்றாக ஒரு நினைவு, ஒரு அனுபவத்துளி; தோன்றி ‘என்னைப்பற்றி எழுது’ என்று என்மனதை நெருக்குவாரப் படுத்திக்கொண்டிருந்தாலும் அவசரப்பட்டு எழுத ஆரம்பித்து விடுவதில்லை. ஆற,அமர மனதின் ஒரு மூலையில் போட்டு, கரு மெருகடைந்த பின்னர் நிதானமாக எழுதும் பழக்கத்தினால் நான் எழுதிய சிறுகதைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் ஒன்று – ‘துணையாக’ என்று வீரகேசரியில் வெளிவந்த சிறுகதை. வெளிநாட்டில் வாழும் ஒருவனுக்கு திருமணம்பேசி, முன்அறியாத ஒருவனுடன் வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதற்காக, மகளை அழைத்துக்கொண்டு கொழும்பு வந்து “லொட்ஜில்’ தங்கியிருக்கும் ஒரு தாய், தனது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நினைவுக்கீற்றினால், மனம் மாறி, மகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பிப்போகிறாள். ‘இலங்கையர்கோனின்’ எழுதிய சிறுகதையான ‘வெள்ளிப்பாதசரம்;’ எனக்கு மிகவும் பிடித்தது. அவர் சித்தரித்த அக்கால ‘வல்லிபுரக்கோயில் திருவிழாவை’ பின்புலமாகக்கொண்டு, எனது இந்தசிறுகதையின் முக்கியதிருப்பமும் அமைந்ததினால் என் மனதிற்கு இதமானதாக இன்றும் இருக்கிறது.



3. நாடகம் அல்லது திரைப்படம் மூலம் சொல்ல வரும் செய்திக்கும் நாவலில் முன்வைக்கும் கருத்துக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் உள்ள வேறுபாடுகள் என்ன என்று நினைக்கிறீர்கள்? (நாடகம் அல்லது திரைப்படம் ஒரு குழு முயற்சி. செலவு அதிகமனாது இருந்தாலும் அதில் முக பாவங்களால், உடல் மொழியால் செய்தியை எடுத்துச் செல்வது ஒப்பீட்டளவில் இலகுவானது. அவ்வகையில் உங்களின் நாவலின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?)

நாடகம் காட்டூன் வரைவது போன்றது. சிலகோடுகளால், சிலவசனங்களினால், ஆழ்ந்த கருத்தினை புரியக்கூடியவர்க்கு – அழுத்திச்சொல்கிறேன் - புரிந்துகொள்ளும் பக்குவம் உடையவர்க்கு உணர்த்தும் சக்தி வாய்ந்தது. இதில் ஒரு சங்கடமும் இருக்கிறது. உயிரும், தசையுமாக மேடையில் இயங்கும் பாத்திரங்களோடு, பார்வையாளன் என்றுமே முற்றுமுழுதாக ஐக்கியமாகிப்போவதில்லை. திரைப்படம் என்பது பெரிய படுதாவில் ஓவியம் வரைவதற்கு ஒப்பானது. எல்லையற்ற காட்சியின் அனுகூலங்கள் நிறையவே திரைப்படத்தில் இருக்கிறன. அத்தோடு திரையில் உலவும் பிம்பங்களோடு பார்வையாளன் தன்னை இணைத்துப்பார்க்கும் சாத்தியம் சற்று அதிகமாகவே இருக்கிறது. வாழ்வின் அடிமட்டத்திலும் வாழும் மனிதனும், கற்பனையில் அற்புதங்களை சாதிக்கும் சந்தோசம் பெறுகிறான். முந்திய தலைமுறையில் எம்.ஜீ.ஆரின் திரைப்படங்கள் வெற்றிபெற்றமைக்கு இதுவே காரணம். நாவலுக்கு இவற்றைவிட நிறையவே அனுகூலங்கள் உள்ளன. நாவல் படைப்பாளிக்கும், வாசகனுக்கும் நேரடியான பந்தத்தை உருவாக்கும் வசதி உடையது. வேறு புலன்களுக்கான தீனிவோடும் திரைப்படம் போன்றோ அல்லது நாடகம் போன்றோ நாவல் இருப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட குழுமுயற்சி என்பதிலேயே திரைப்படம், நாடகம் என்பன தனிப்பட்ட ஆளுமையை இழந்துவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம். செலவு அதிகமென்பதினால், அவற்றை மீளப்பெறுவதற்காக ‘சமரசங்கள்’ செய்யப்படலாம். நாவலுக்கு இந்தத்தடைகள் எதுவுமேயில்லை. நிச்சலனமான ஓடையைப்போல அமைதியாக வாசகனின் மனதில் சொல்லவந்ததை அது பதிந்து செல்லும். எழுத்தாளர் சா.கந்தசாமி சொன்னதைப்போல, “நாவல் என்பது முடிந்துவிடும் விசயமல்ல. நாவல் வாசித்து முடிக்கப்பட்டவுடன், வாசகன் மனதில் இன்னுமொரு நாவல் தொடர்கிறது’.

4. உங்களின் எழுத்துக்கூடாக நீங்கள் எதைக் காட்ட முனைகிறீர்கள்?

படைப்புக்கள் மூலம் போதனை செய்வது என்றுமே என்நோக்கமாயிருக்கவேயில்லை. அதுவும் நேரடியான பிரச்சார இலக்கியம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சமூகத்தில் நிகழ்வனவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன். வாசிப்பவரின் மனதில் அவை எழுப்பும் மறுகேள்விகளின் சாத்தியம் எனக்கு தெரியும் என்பதினால்.

5. நாடகம், திரைப்படம், நகைச்சுவை, கட்டுரை, விவரணம் என பலதுறைகளில் கால் பதித்திருக்கும் உங்களுக்கு மனநிறைவைத் தரும் செயற்பாடு என்று எதைக் கருதுகிறீர்கள்?

இவை எல்லாமேதான் என்னை நாவல்துறைக்குள் செல்ல கால்கோள் இட்டிருக்கின்றன. ஒரு நடிகனுக்குரிய அவதானம், உணர்ச்சிகளை எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை, திரைப்படக்காரனுக்குரிய காட்சிப்புலத்தை சீராக வர்ணிக்கும் அனுபவம், நீண்டகதையில் இழையோடவேண்டிய நகைச்சுவை, இவை எல்லாவற்றையும் விவரணமாக பதிவுசெய்யும் ஆற்றல் எல்லாமே எனது நாவல் எழுதப்பட்டபோது உதவிசெய்திருக்கின்றன. எனவே இவற்றின் ஒருங்கிணைவே எனக்கு மனநிறைவை தந்த நாவல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

6. நல்ல இலக்கியம் என்றால் என்ன அது சமூகத்துக்கு எவ்வகையான பயனைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நல்ல இலக்கியம் என்பதின் நோக்கம் நல்ல மக்களை உருவாக்க வேண்டியதாகவிருக்கும். ரசனைக்கு தீனிபோடுகிறோம் என்று நச்சு இலக்கியங்கள் படைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையாகவிருக்கிறது. ‘எனக்காகவே எழுதுகிறேன்” என்று ஒரு படைப்பாளி சொன்னபொழுது, என்மனதில் எழுந்த ஒருகேள்வி, “அவர் எப்படிப்பட்டவராக இருக்கலாம்?" நியாயமான சநதேகம் தானே இது?

7. சமூகத்திலுள்ள பல குறைகளை நகைச்சுவையுடனும், நளினத்துடனும் வெளிப்படுத்துவதில் வல்லவர் நீங்கள். இந்த வகைக் கலை இப்போது புலம் பெயர் மக்களால் எவ்வளவு தூரத்துக்கு வரவேற்கப்படுகிறது?

நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வது ஆரோக்கியமானது. அதுவும் நகைச்சுவையாகச்சொல்லப்படும் அந்தக்கலை புலம்பெயர் நாடுகளிலிலே வேரூன்றியதொன்று. இருப்பினும் புலம்பெயர்வாழ் நம்மக்கள் மத்தியிலே அதற்கான தயார்நிலை இல்லாதிருப்பது எனக்கு ஆச்சர்யமாகவிருக்கிறது. மாறி,மாறி புகழ்ந்து கொள்வதில் உள்ள நாட்டம், சுயவிமரிசனம் செய்து கொள்வதில் இல்லை என்று மட்டும் எனக்கு புரிகிறது.

8. உங்களைக் கவர்ந்த புத்தகம் அல்லது எழுத்தாளர் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஆரம்பகாலப்படைப்பான “அக்கா’ சிறுகதைத்தொகுதியே எனக்கு மிகவும் பிடித்தது. அதில் முக்கியமாக இரண்டு சிறுகதைகள் - 'அக்கா’ மற்றது ‘அனுலா’.

இந்திய சஞ்சிகையான "கல்கி" எந்த ஆண்டில் "ஈழத்துச்சிறுகதைப்போட்டியை நடத்தியது என்று எனக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அந்த சிறுகதைப்போட்டியின் முடிவுகளை. ஆவலுடன் பார்த்திருந்து வாசித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அந்தப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகள் முதல் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்ட கதைகள் வரை எல்லாவற்றையும் படித்தேன். ஆனால் அவற்றுள்ளே என் மனதில் இடம்பிடித்த கதை - அ.முத்துலிங்கத்தின் "அனுலா" என்ற இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதைதான்.

ஒரு இளைஞனாக இந்தச்சிறுகதையை மனப்பாடமாக ஆகுமளவிற்கு பலமுறை வாசித்திருப்பேன். இக்கதையின் ஓட்டம், கதையின் நாயக பாத்திரத்தின் குணாதிசயம்; எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தன்னை நாடிவரும் அப்பாவியான கிராமப்பெண்ணை உதாசீனம் செய்யும், இதயத்தை கிழிப்பதுபோல வார்த்தைகளைக்கொட்டும் வக்கிரமான அந்தப்பாத்திரம் எனது அபிமானத்துக்குரிய அனுலாவை வேதனைக்கு உள்ளாக்குவதை நான் பரிபூரணமாக வெறுத்தேன். கடைசி வசனம் கூட எனக்கு இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது "இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப்போகிறேன்".....விளக்கு எப்போது அணைந்தது...ஒரு துளிகூட காற்று வீசவில்லையே.

யாழ்ப்பாணத்தில் தொடங்கி ரொறன்ரோ வரை.. எத்தனை மைல்கள்..எத்தனை ஆண்டுகள் என் அபிமான எழுத்தாளரை தேடிக் களைத்து, எதிர்பாராமல் ஸ்காபரொவில் முதன்முதலாக சந்தித்த வேளையிலே இந்த வசனத்தை அவருக்கு மறக்காமல் சொன்னேன். அவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்.

9. பொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது இந்த நாவலின் அட்டைப்படத்தைப்பற்றி, வரைந்த ஓவியர் பற்றிச்சொல்லுங்கள்.

ஏறக்குறைய ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர்தான்; சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது சுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை வரைந்து தந்தார். யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் கருதுகிறேன்.


10. இந்த நாவலுக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த முன்னுரையைப் பகிர்ந்தவர் பற்றி குறிப்பிடுங்களேன்

இந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகால நண்பருமான பி.எச்.அப்துல்ஹமீத் தான.; அவர் இந்த நாவலுக்கான முன்னுரையுடன், என்னைப் பற்றிய அறிமுக உரையையும் இணைத்து வழங்கியிருக்கின்றார்.

நான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். நாங்கள் வானொலியில் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். என்று அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகவாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.


11. உங்களின் நாவல் மூலம் இலங்கையில் உள்ள ஒரு பகுதி மக்களின் வாழ்வுக் கோலங்களை அழகாக வாசகர்களின் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். சமகால அல்லது புகலிடப் பிரச்சனைகள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன். நிறைவாக நீங்கள் வாசகர்களுக்கு வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது நாவல் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. நனவிடை தோய்தல் என்ற அடிப்படையிலே, எனதும் என்னையொத்தவர்களினதும் சிறு பராயங்களின் சில்மி~ங்களை, அனுபங்களை நகைச்சுவை தோய நான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைத்தொடர் வெகுவிரைவில் நூல்வடிவில் வரவிருக்கிறது. நீங்கள் கூறியதுபோலவே புலம்பெயர்வாழ்வின் பதிவாக நாவல் ஒன்று எழுதுவதற்கான முனைப்பும் என்மனதில் இருக்கிறது.

வாசிப்புப்பழக்கம் அருகிக்கொண்டேபோகிறது. கணினியின் அதிக்கம் மேலோங்குகிறது என்று அடிக்கடி ஆரூடம் கூறிக்கொள்பவர்களின் மத்தியிலும், ஏராளமான தமிழ் நூல்கள் தினமும் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இணையத்தில் கூட புத்தகவிழாக்கள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறத்தான் செய்கின்றன. கணினியில் தமிழில் எழுதுபவர்கள் கூட, தங்கள் படைப்புக்களை அச்சில் காணும் கனவுகளோடுதான் உலவுகிறார்கள்.

வாசகர்களே, நீங்கள் நிறையவாசிப்பதன்மூலமே படைப்பாற்றல் மாத்திரமல்ல, நல்வாழ்வுக்கான அத்தனை ஆற்றல்களையும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.

இலங்கையில் ஞானம் சஞ்சிகையில் பூபாலசிங்கம் புத்தகசாலையின் விளம்பரம்




















இப்போது காலச்சுவடு இதழில் விளம்பரம்



இதழ் 120, டிசம்பர் 2009






எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" பற்றிய சிறு விளம்பரம் டிசம்பர் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது.

Wednesday, December 16, 2009

எனது நாவல் பற்றிய இரண்டு விமர்சனங்கள்

காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக (கே.எஸ். பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் )

வல்வை சாகரா (யாழ்களத்தில் எழுதியது)

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.
சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.
இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி.. நூல் விமர்சனம்

கலைஞன் யாழ்களத்தில் எழுதியது

அனைவரையும் மீண்டும் ஓர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி,

அதிகம் யோசிக்கவேண்டாம்.. மேலுள்ள 'புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..' என்கின்ற தலைப்பு 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனப்படும் பெயரில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நாவலில் வருகின்ற என்னைக்கவர்ந்த ஓர் வசனத்தின் ஒரு பகுதி.

நான் கடந்தமாதம் வடலி வலைத்தளம் ஊடாக வாங்கிய மேற்குறிப்பிட்ட நாவல் நீண்டபயணம் செய்து அண்மையில் வீடுவந்து சேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாவலை முழுமையாக படித்து முடித்தேன். முதலில், இந்த நாவலின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், நாவலை வெளியிட்ட வடலி பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.

இனி, கரையைத்தேடும் கட்டுமரங்கள் பற்றிய எனது எண்ணப்பகிர்வுகள் இங்கே விரிகின்றன:



எனக்குள் ஏற்பட்ட அனுபவங்கள்:

நாவலை வாசித்துக்கொண்டு இருந்தபோது.. இடையிடையே நூலின் பின்மட்டையில் இருக்கின்ற பாலச்சந்திரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டேன். இதுவரை காலமும் அறிந்திராத ஓர் பாலச்சந்திரனை நான் அப்போது உணர்ந்துகொண்டேன், தரிசித்துக்கொண்டேன். இது சும்மா ஓர் கதை என்பதைவிட... வாழ்க்கை என்பதாகி.. எத்தனையோ பல சிந்தனைகளை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் எனக்குள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது. நாவலை வாசித்துக்கொண்டு சென்றபோது சில இடங்களில் உண்மையில் எனக்கு அழுகை வந்தது, ஆத்திரமும் வந்தது.

நாவலின் விசேடதன்மை:

கதாசிரியர் இரு இடங்களில் சிறுதவறு செய்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏன் என்றால் கமல், சிறீதேவி, எம்.ஜி.ஆர் பற்றிய விடயங்களை புகுத்தி.. ஏறக்குறைய இத்தனையாம் ஆண்டில் நடைபெற்ற கதை என்கின்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். அவை தவிர்க்கப்பட்டு இருந்தால்.. மறுபுறத்தில் இந்தக்கதை ஏறக்குறைய 1960 அல்லது அதற்கும் முற்பட்ட காலம் தொடக்கம் 1985வரை என்கின்ற நீண்டகாலப் பகுதியினுள் நடைபெற்று இருக்கக்கூடிய கதை என்று வாசிப்பவர்களால் உணரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லத்தோன்றுகின்றது. இங்கு நாவலில் நான் கண்டவிடேச தன்மையாக கூறக்கூடியது என்ன என்றால்.. இதுவரை எங்களுக்கு தெரிந்திராத ஓர் தாயகத்தை, தாயகத்து வாழ்க்கையை கதாசிரியர் கண்முன்கொண்டுவந்து காட்டி இருக்கின்றார்.

கதைக்கரு, சொல்லவருகின்ற செய்தி:

ஆடம்பரமான குளிர்பானங்களின் மோகத்தில் அலையக்கூடியவர்களுக்கு கதாசிரியர் தண்ணீர்மீது தாகம் உருவாகும்படி செய்து அதன் மகிமையை உணர்த்தி இருக்கின்றார். அதாவது, வாழ்க்கைக்கு தேவையானது எது? அன்பு? பண்பு? அழகு? இளமை? பணம்? படிப்பு? பதவி? நம்பிக்கை? .. வாழ்க்கை எதன் அடிப்படையில் வாழப்படுகின்றது? வாழ்தல் என்பது என்ன?... எல்லாவற்றுக்குமான விடைகளாக.. கதையின் கரு பின்னப்பட்டு இருக்கின்றது. இந்த நாவலை வெறும் நாவலாக பார்க்காது ஓர் ஆவணப்பதிவு என்றும் கூறலாமோ என்று நினைக்கின்றேன். ஏனெனில், இறந்தகால நிகழ்வுகளின் கால்தடங்களை கதாசிரியர் கடுகளவும் பிசையாது அப்படியே கதையில் அச்சேற்றி இருப்பது தெரிகின்றது.



கதை சொல்லப்படும் பாங்கு:

கதையின் சுமார் 85% யதார்த்தமாக இருந்தது என்று சொல்லலாம். ஏதோ காரணத்துக்காகவோ அல்லது வழமையான தமிழ்சினிமாவின் தாக்கம் காரணமாகவோ என்னமோ சுமார் 15% பகுதி செயற்கைத்தனமாக இருந்தது என்றும் சொல்லித்தான் ஆகவேண்டும். சிலவேளைகளில் நாவல் என்றுவரும்போது.... தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போல சில அம்சங்களை தவிர்க்கமுடியாத தன்மை, மற்றும், நாவலுக்கு உரித்தான குணங்களை, தனித்துவங்களை காட்டியாகவேண்டிய அழுத்தம் நாவலாசிரியர்களுக்கு ஏற்படுகின்றதோ என்னமோ..! ஆரம்பம் முதல் இறுதிவரை.. கதை சோர்வில்லாமல் சென்றது என்பதோடு மட்டும் அல்லாது கதை நிறைவடைந்தபின்னரும் பல விவாதங்களை, ஆராய்ச்சிகளை 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனது மனதினுள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது.

மொழித்திறன்:

இத்தனை விதம், விதமான சொற்களை இவர் எப்படி லாவகமாகவும், சாதூரியமாகவும் நாவலில் பிரயோகித்து இருக்கின்றார் என்று என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. நீண்டதோர் தாயகத்து சொற்களஞ்சியம் ஒன்றை நாவலில் காணமுடிகின்றது. எத்தனையோ வருடங்களின்பின் தாயகத்தில் நான் முன்பு இருந்தபோது பயன்படுத்திய ஏராளம் சொற்களை நாவலை படித்தபோது என்னால் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த நாவல் ஓர் ஆவணப்பதிவாக கொள்ளப்படமுடியுமோ என்று நான் எண்ணுவதற்கு இங்குள்ள சொற்பதங்கள், சொற்கள் அல்லது கலைச்சொற்களும் பிரதான காரணம் எனக்கூறலாம்.

பேச்சுவழக்கு:

நாவல் உயிர்ப்பாக இருப்பதற்கு, இதை நான் வெறும் நாவல் என்று செயற்கைத்தனமாக பிரித்துப்பார்த்து உணரமுடியாதபடி இருப்பதற்கு கதையில் வரும் பாத்திரங்களின் பேச்சுவழக்கு முக்கிய பங்கை வகித்து இருக்கின்றது. பல பாத்திரங்கள் பேசும்போது ஒன்றைக்கூறி... இறுதியில்... 'அ' என்று முடிப்பார்கள். கதையில் இதை ஒவ்வொரு தடவையும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.



நாவலின் பெறுமதி:

நான் வடலி வலைத்தளம் ஊடாக 17.90 அமெரிக்க டாலர்களுக்கு புத்தகத்தை பெற்று இருந்தேன். ஆனால்.. புத்தகத்தின் பெறுமதி அதைவிடப் பல்லாயிரம் மடங்குகள் பெரியது என்பதை இப்போது உணர்ந்துகொள்கின்றேன். எங்கள் மனித வாழ்வியலை திரும்பிப்பார்த்து சிந்திக்கவைக்கின்ற, தாயகத்திற்கு விடுமுறையில் சென்று வருகின்ற அனுபவத்தை தருகின்ற 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்' நாவலை நாவலாக பார்க்கமுடியவில்லை, வாழ்வாகவே உணர்கின்றேன்.

நூல் அமைப்பு:

நூல் வடிவமைப்பு, அச்சு, எழுத்துக்களின் ஒழுங்கமைப்பு என அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருக்கின்றன. நாற்பத்து மூன்று அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் நேர்த்தியாக வகுக்கப்பட்டு உள்ளதோடு, கடல் அலைகளாக ஒன்றுடன் ஒன்று சீராக தொடர்புபட்டு செல்கின்றன. ISBN: 9788190840507

நாவலில் இருந்து:

உங்கள் பார்வைக்காக நாவலில் என்னைக் கவர்ந்த பலவற்றில் எழுந்தமானமாக பொறுக்கப்பட்ட சில நறுக்கல்கள்:

***

மாரியாம்பிள்ளை அட்டகாசமாக சிரித்தவாறே,

'நீங்கள் எல்லாரும்தான் ஏதேதோ கதைச்சீங்களே.. என்ரை நெத்தலி அப்பாவை விட்டிட்டு இருக்குமே..'

என்ற சின்னமகளை அருகில் இருத்தி, தானும் சாப்பிட்டு, மகளுக்கும் 'தீத்தி', இடையிடையே தன் மூத்தமகளின் சமையல் திறனையும் பாராட்டி, மூத்தவன் மனுவலைத் திட்டித்தீர்த்து, சாப்பிடுதலே ஒரு நீண்ட கிரியையாக, ஒருவாறு ஒப்பேறியது.

***

'அப்படியானால் ஏன் நீ என்னுடன் நெருங்கிப் பழகினனீ... நம்பிக்கையைத் தந்தனீ...?' என்று அவன் வெடித்து சிதறி வினாத்தொடுக்கவில்லை.

அப்படிக் கேட்டிருந்தாலும்... ' அண்ணை போலை நினைச்சு உங்களோட பழகினனான்.. நீங்கள் இப்படி நினைப்பீங்களெண்டு...'

இந்த ரீதியில் பதில் வருமென்று அவனுக்கு, அதிகம் படிக்காவிட்டாலும் தெரிந்தே இருந்தது.

***

காதல் என்பது புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து, இப்படியெல்லாம் 'ரசவாதவித்தை' இயற்றும் வல்லமை வாய்ந்ததுதானே!

***

பாலினால், வயதினால், சாதியினால், குலத்தினால், கோத்திரத்தினால், மதத்தினால், சுயநலத்தினால், அன்பினால், நட்பினால்.. உறவுகளினால் என இவ்வாறு பல்வேறு வகைகளில் தனியாகவும், சோடிகளாகவும், குழுக்களாகவும் நாங்கள் கட்டப்பட்டு கட்டுமரங்களாக இருக்கின்றோம். கரையைச் சென்றடைகின்ற கனவுகளோடு.. நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

This post has been edited by கலைஞன்: 08 September 2009 - 09:30 AM

Friday, December 4, 2009

கனடாவில் முதலாவது தமிழ் நகைச்சுவைத்தொடர் (Sitcom) "நாதன், நீதன், நேதன்"


கனடா தொலைக்காட்சியில் முதலாவது நகைச்சுவைத்தொடர் (Sitcom) என்றவகையிலே நான் எழுதி, நெறிப்படுத்திய "நாதன்,நீதன், நேதன்" என்று மூன்று சகோதரர்களின் கதையை சொல்லும் தொடர் 21 வாரங்களாக TVI தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.

மூத்த அண்ணன் நாதன் (திலீப்குமார்) ஒரு பிரபல உண்வகத்தில் சமையற்காரராக (CHEF) பணி புரிகிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டாமவர் நீதன் (அலேக்ஸ்) ஒரு வழக்கறிஞர்.திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுக்கொண்டவர். மூன்றாவதான கடைக்குட்டி நேதன் (திலீபன்) ஒரு பல்கலைகழக மாணவன். சகமாணவி ஒருத்தியை காதலிப்பவர். இவர்களோடு நீதனின் முன்னாள் மனைவி நிரஞ்சலா ( தர்ஷினி), அவரது சகோதரனான வானொலி அறிவிப்பாளன் நிரோஷன் (ரமேஷ்)இப்படி பல பாத்திரங்கள் வருகின்றான.



Sunday, November 29, 2009

எழுத்தாளர் சந்திப்பு








2009 நவம்பர் மாதம் 8ந்திகதி ஸ்கார்பரோவில் உள்ள முருகன் புத்தகசாலையில் வாசகர்கள் பலர் என்னை சந்தித்து எனது கையொப்பத்துடன் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு வித்தியாசமான முயற்சியும், அனுபவமும்.

மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் அனேகமாக புத்தகசாலைகளில் வந்திருந்து வாசகர்களை சந்தித்து தங்கள் நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுக்கிறார்கள். வெளியீட்டு விழாக்கள் என்று வைப்பதில்லை. படைப்பாளியோடு வாசகர்கள் உறவாடும் சந்தர்ப்பங்களை இந்த் விழாக்கள் தருவதில்லை. படைப்பாளியை மேடையில் இருத்திவைத்து எட்டாப்பொருளாக்குவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.
(படங்கள் - ஏ.கருணாநிதி)




























ஒரு ஆங்கில நூலாசிரியரின் BOOK Signing !
Book signing is the affixing of a signature to the title page or flyleaf of a book by its author. A book signing is an event, usually at a bookstore or library where an author sits and signs books for a period of time.
(Thanks to Wikipedia)

Thursday, October 15, 2009

"கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெளியீட்டுவிழாப்படங்கள்



தமிழ்த்தாய் வாழ்த்து
பாரதி கலைக்கோயில் மாணவிகள்


நிகழ்ச்சித்தொகுப்பு
துஷி ஞானப்பிரகாசம்


வரவேற்புரை
தாய்வீடு பத்திரிகை
பதிப்பாளர் - ஆசிரியர்
பி.ஜே.திலீப்குமார்















































நட்புரை கதிர் துரைசிங்கம்
வாழ்த்துரை சோக்கல்லோ சண்முகநாதன்



வாழ்த்துரை
உதயன் பிரதமஆசிரியர்
ஆர்.என்.லோகேந்திரலிங்கம்













தமிழகப்பேச்சாளர்
இளசை சுந்தரம் கௌரவம்













மேடையில்
நானும் திருமதியும்


















வாழ்த்துரை
வரகுணன் மகாதேவன்














தலைமையுரை
சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்












வெளியீட்டுரை
மகாஜனா முன்னாள் அதிபர்
பொ.கனகசபாபதி











முதற்பிரதி பெறுகிறார்
எனது தாயார்
திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்













ஆய்வுரை
ரூபவாகினி முன்னாள் தமிழ் பணிப்பாளர்
பி.விக்னேஸ்வரன்











வாழ்த்துரை
பாரதிகலைக்கோயில் இயக்குனர்
எஸ்.மதிவாசன்














பாரதி கலைக்கோயில் கௌரவம்















கனேடிய திரைப்படச்சங்கம் கௌரவம்
சிறீமுருகன், திவ்வியராஜன், அருண்












விழாக்குழுவினருடன்

Sunday, September 27, 2009

தினக்குரலில் என் நாவல் அறிமுகம்


இலங்கையின் தினக்குரல் பத்திரிகையில் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.

"எழுத்தின் ரசனை இலக்கியத்துக்குள்ளேயே பொதிந்திருக்கும். துல்லியமாக தன்னுள்ளே சமூக உணர்வுகளின் வெளிப்பாடுகளினை எழுத்துக்களால் இங்கிதமாக ரசனையுடன் படைக்கப்படும் படைப்பாக அமைகிறது. இவ்வாறு தனக்கென்று தனியான இடத்தினை இறுகப்பிடித்துள்ள நாவல்களின் தோற்றம் இன்றைய காலங்களில் அருமையாகவே காணப்படுகின்ற நிலையில் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பாக, புலம்பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் சமூக நினைவுகளை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் சிற்பமாக "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் நூலகத்துள் வருகை தந்துள்ளமை ஈழத்து தமிழ் நாவல் இலக்கியச்சமூகத்திற்கு கிடைத்துள்ள அரும்சொத்தாகும்......"
இவ்வாறு தொடர்கிறது இந்த அறிமுகம்..

Sunday, September 13, 2009

"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" - எனது நாவல்



தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்;தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது. – கே.எஸ்.பாலச்சந்திரன்

பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்...
மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது.

- “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து


கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் -

கரையைத்தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா
ஒக்டோபர் 3' 2009
சனிக்கிழமை
மாலை 5.30க்கு
இடம்:
அஜின்கோட் சமூக நிலையம்
31, கிளென் வாட்போர்ட் டிறைவ்
ஸ்காபரோ, ஒன்ராரியோ



குமுதம் குழுமம் சார்ந்த "தீராநதி" சஞ்நிகையின் செப்ரம்பர் 2009 இதழில் -







நடிகர் கமலஹாசன் எனது நாவலுடன் -
என் நெருங்கிய நண்பனும், எனது நாவலுக்கு முன்னுரையெழுதியிருப்பவருமான உலகறிந்த தமிழ் ஒலிபரப்பாளனான பி.எச்.அப்துல் ஹமீட் மூலமாக நான் நடிகர் கமலுக்கு அறிமுகமாகியதும், எனது நாடக ஒலி நாடாக்கள் அவருக்கு "தெனாலி" திரைப்படத்தில் உதவியாகவிருந்ததும், அதை "தெனாலி" வெள்ளிவிழா மேடையில் கமல் குறிப்பிட்டு என்னை பெருமைப்படுத்தியதையும் மகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.

அண்மையில் நண்பர் ஹமீட், நடிகர் கமலைச் சந்தித்தபொழுது, எனது நாவலை அவருக்கு கொடுத்து இருக்கிறார். கமலை நான் கனடாவில் சந்தித்து உரையாடியவற்றை அவர் நினைவுபடுத்தியருக்கிறார். சந்தோசமான நிகழ்வுகள்...