Wednesday, September 1, 2010

சாயாவனம் - நாவல் மீள்வாசிப்பு


சாயாவனம் ஒருநாளில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய நாவல்தான். 200க்கு குறைந்தபக்கங்கள்தான். ஆனால் அதை வாசித்து முடிந்தபின் நாவலாசிரியர் பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதைப் போல, "வாசித்தவர் மனதில் இன்னுமொரு நாவல் ஆரம்பிக்கிறது"

நாவலின் கதாநாயகன் காடுதான். அதனோடு அதை அழிக்கப்புறப்படும் மனிதனின் இடையறாப் போராட்டமே கதை. இதேபோலத்தான் ஏர்னேஸ்ட் ஹேமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் கிழவனுக்கு பெரிய மீனுடன் கடலுக்குள் நடைபெறும் போராட்டமும். நீயாநானா என்ற நிலை இறுதிவரை தொடர்கிறது.

இந்த இரண்டு சிறந்த நாவல்களுக்கிடயில் சுவையான ஒற்றுமைகள் இருப்பதை அவதானித்தேன். "கடலும் கிழவனும் (The Oldman and the Sea)" நாவல்கூட127 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். சா.கந்தசாமியின் முதல் நாவல் "சாயாவனம்". இதற்காக அவருக்கு சாஹித்ய விருது கிடைத்தது. ஹேமிங்வே எழுதி வெளியிட்ட கடைசி நாவலும், புகழ் ஏணியில் ஏற்றிய நாவலும் -"கடலும் கிழவனும்' தான். இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஹேமிங்வேயின் நாவலில் சான்ரியாகோ என்ற மீனவக்கிழவன் 84 நாட்களாக பெரிய மீன் எதுவும் அகப்படாமல், துணைக்கு வருபவர்களும் கைவிட்டுவிட 85வது நாள், சாதிக்கவேண்டும் என்ற வன்மத்துடன் கடலில் இறங்குகிறான். பிரம்மாண்டமான மீன் ஒன்று அவனது தூண்டிலில் சிக்குகிறது..பிறகென்ன..போராட்டந்தான். இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் இப்படியே கரைகின்றன. தன்னோடு மூர்க்கமாக போராடும் அந்த ராட்சச மீன்மீது கிழவனுக்கு இனம்புரியாத மதிப்பே உருவாகுகின்றது.இதேபோல "சாயாவனத்தில்"தன்முன்னே பரந்துநிற்கும் காட்டைப் பார்த்து சிதம்பரம் பிரமித்து, மதிப்பே கொள்கிறான்.

மீனை இறுதியில் கொன்றுவிட்டாலும், பெரும் சுறாக்கள் அதன் இறைச்சியை கைப்பற்றிக்கொள்ள மீனின் வெறும் எலும்புக்கூட்டுடன் கிழவன் கரைக்கு வருகிறான்.
சாயாவனத்தில் காட்டின் ஒருபகுதியை அழித்து ஆலை போடுவதுதான் சிதம்பரத்தின் நோக்கமாக இருந்த்தது. ஆனால் அவன் இட்ட தீ, அவன் கட்டிய வீடு உட்பட எல்லாவற்ரையுமே பொசுக்கிவிடுகிறது. இயற்கையின் ஒரு கூறு அவனை தோற்கடித்து விடுகிறது.

சாயாவனத்தில் சிதம்பரத்துக்கு துணையாகவரும் சிறுவன் கலியபெருமாளைப் போலவே, கடலும் கிழவனும் நாவலில் கிழவனுக்கு துணையாக ஒரு சிறுவன் வருகிறான். அவனது பெயர் மனோலின் (Manolin).

சா.கந்தசாமியின் இந்த நாவலை மீண்டுமொருமுறை வாசித்தபொழுது ஒரேமூச்சில் வாசித்து முடிக்கும் ஆவலைத் தந்தது, மனிதரின் காலடிகள் பட்டிராத பகுதிகளுடன் தன்னிச்சையாக ஓங்கி வளர்ந்தமரங்களுடன்,செடி கொடிகளுடன், மூங்கில் காடுகளுடன், ஜீவராசிகளுடன் அந்த காட்டை அவர் அறிமுகம் செய்து வைத்த பாங்கு. அந்தமரங்களின் தனித்தன்மைகள், அந்த ஊர்மக்களுக்கு அந்தகாடு வழங்கிய வளங்கள், மிருகங்கள், பறவைகள்,காட்டில் தனிக்காட்டு ராஜவாக வாழ்ந்த முரட்டு குழுமாடு எல்லாமே மனிதன் மூட்டிய தீயினால் கருகிப்போன சோகம்.

புளியைதரும் மரங்களை அழித்து இனிப்பான வெல்லம் தரும் ஆலையை சிதம்பரம் நிறுவினாலும், புளிப்புக்கு பதிலாக இனிப்பு தரமுற்படும் அவனை ஒரு மூதாட்டி கோபிப்பதோடு நாவல் முடிவது ஒரு முரண்நகை.

1965ல் எழுதப்பட்ட இந்த நாவலில் பல ஆண்டுகளுக்கு முந்திய நமக்கு பழக்கமில்லாத ஒரு பண்டமாற்று சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையை காண்கிறோம். தஞ்சை மாவட்டத்தின் பின்னணியில்,காவிரியின் கரையில் நிகழும் கதை. சிதம்பரம்,சிவனாண்டிதேவர், பாப்பா, பஞ்சவர்ணம், குஞ்சம்மா, கலியபெருமாள் யாவருமே தெளிவான அடையாளங்களுடன் மனதில் பதிந்து போகிறார்கள். இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த அவர்களை நினைக்க பொறாமையாக இருக்கிறது.

சாயாவனம் என்மனதில் சாயாமல் நிமிர்ந்தே நிற்கிறது. தமிழ் படைப்பிலக்கியத்தின் ஒரு 'Classic'தான்.

No comments:

Post a Comment