Sunday, July 25, 2010

தேரோட்டி மகனும் நானும்



எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது.

இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பி.எஸ்.ராமையா

இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன்.

சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டிமகன் நாடகத்தில் சகாதேவனாக சிறிய பாத்திரத்தில் நடித்த கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் இவ்வாறு தன் அனுபவத்தை கூறுகிறார்.

'1959-ல் பி.எஸ். ராமையா எழுதிய ''தேரோட்டி மகன் '' சேவாஸடேஜ் தயாரிப்பில் உள்ளூர் -வெளியூரெங்கும் பிரபலமாகி..கொடி கட்டிப் பறந்தது.. எஸ். வி. சகஸ்ரநாமம் கர்ணனாகவும் முத்துராமன் துரியோதனனாகவும் பாத்திரமேற்று சிறபபாக நடித்தார்கள்..நான் மூன்று .சீன்களில் ''தலை ' காட்டும் சகாதேவனாக நடித்தேன்..அதிர்ஷ;டவசமாக ஒரு அருமையான மருதகாசியின் பக்திப் பாடலை முதல் .சீனில் பாடி வாயசைத்து கிருஷ;ணனை கட்டிப் போடுவது என் பங்கு சாதனையாக வாய்த்தது. .கிருஷ;ணனை எஸ்.வி.கோபாலகிருஷ;ணனை கட்டிப் போட்டு திரை விழுந்து விளக்கணைந்ததும் கொட்டகையில் தவறாமல் கிளம்பும் பயங்கர கரகோஷ ஒலி.. என் நடிப்புத் திறமையில் அதிக நம்பிக்கையற்ற எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது... புராண நாடகங்கள் இந்த வகையில் நடிகனுக்கு ஒரு வசதியான வாய்ப்பு என்று தோன்றியது...சனங்கள் ஒரு ராமனையோ, கிருஷ;ணனையோ உடனே நம்பி விடுகிறார்கள்'

தேரோட்டிமகன் நாடகத்தை கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வௌ;வேறுபாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். அவருடன் அவரது நாடகக்குழுவைச்சார்ந்த ஏ.ரகுநாதன், குழந்தை சண்முகலிங்கம், எஸ்.ரி. அரசு ரி.ராஜகோபால் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

பின்னர் ஏ.ரகுநாதன் அவர்களே தேரோட்டிமகன் நாடகத்தை பலதடவைகள் மேடையேற்றினார். இவர் காலத்துக்கு காலம் இந்நாடகத்தில் பல சிறந்த கலைஞர்களை இணைத்துக்கொண்டார். இலங்கைவானொலியின் பிரபல அறிவிப்பாளர் திருமதி இராசேஸ்வரி சண்முகம் சிலமேடையேற்றங்களில் குந்தியாக நடித்து தன்சோகநடிப்பினால் பார்வையாளர்களை கண்ணீர் சிந்தவைத்த நினைவுகளை ரகுநாதன் அவர்கள் என்னோடு பங்கிட்டுக்கொண்டிருக்கிறார். இன்னுமொரு மறக்கமுடியாத கலைஞர் ரி.ராஜேஸ்வரன். இந்hடகத்தில் கர்ணனுடைய மாமன்பாத்திரத்தில் நடிப்பதைப்பார்த்திருக்கிறேன். இவர் இலங்கையின் ஆரம்பகால திரைப்படங்களில ஒன்றான 'டாக்சி டிரைவர்' திரைப்படத்தின் கதாநாயகள்.

1974ம் ஆண்டில் மார்கழிமாதத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி;, கிளிநொச்சி அரசினர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் ஆகிய அரங்குகளில் மூன்றுநாட்கள் அடுத்தடுத்து தேரோட்டிமகன் அரங்கேறியபோது நானும் இணைந்துகொண்டேன். அனேகமாக நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை முதன்முதலாக ஒரு இதிகாசநாடகத்தில் அதுவும் கண்ணன் பாத்திரத்தில் நடிக்கவைத்தார் ரகுநாதன் அண்ணன்.

எனக்கு இது புது அனுபவமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தாலும், ஒப்பனை, ஆடை அலங்காரம், பேச்சு நடை, நடிப்புப்பாணி என்று பலவிதத்திலும் மாறுபட்ட இந்த நாடகத்தில் அதுவும் கிருஷ;ணன் பாத்திரத்தில்; நான் சோபிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கவே செய்தது. (ஆமாம்.. மயிலிறகும், வேய்ங்குழலுமாக நீலவண்ணனாக வரும் கண்ணன்தான்.)

இருந்தாலும் என்னால் முடியும் என்று நம்பிக்கையை தந்த ரகுநாதன் அதற்கான ஒரு சுவையான காரணத்தையும் சொன்னார். பொதுவாக இத்;தகைய கண்ணன், ராமன் போன்ற தெய்வப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சற்றுப் பெண்மைச்சாயல் உள்ளவர்களாக இருக்கவும் வேண்டும். ஏற்கெனவே நான் ஒரு நகைச்சுவை நாடகத்தில் (புளுகர் பொன்னையா) ஒரு காட்சியில் பெண்வேடத்தில் வந்து அசத்தியிருக்கிறேன் என்பதையும் ஞாபகப்படுத்தினார். அத்தோடு மீசை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டார்.

என்ன செய்வது.. கருகருவென்று வளர்ந்திருந்த எனது இளமைக்கால மீசையை தியாகம் பண்ணத்துணிந்து விட்டேன். ஆனாலும் அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதாவது ஒப்பனை செய்துகொள்வதற்கு சற்றுமுன்னதாகத்தான் மீசைக்கு விடைகொடுப்பேன் என்பதுதான் அது. இது ஒவ்வொரு முறை மேடையேற்றத்தின்போதும் நடந்தது. மீசை வளர்வதும், மறைவதுமாய் தொடர்ந்தது.

ஆந்த நாடகத்தில் என்னோடு நடித்தவர்களில் அனேகர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள். அத்தோடு அக்கால இசைநாடகங்களில் அனேகமாக பெண்வேடங்களில் ஆண்களே நடிப்பார்கள். அதேபோல எங்கள் நாடகத்திலும்; முக்கிய பெண் பாத்திரமான 'குந்தி' வேடத்தில் நடித்தவர் ஒரு ஆண்கலைஞர். (பிரான்சிஸ் ஜெனம்.(வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்தவர்) இதைவிட எங்களுக்கு ஒப்பனை செய்தவர் மிகநீண்டகாலமாக ஒப்பனைசெய்வதில் பிரக்யாதி பெற்றிருந்த சாமுவேல் பெஞ்சமின் என்பவர்.

அவர் ஒப்பனை செய்வதற்கு 'அரிதாரம்' என்ற சுண்ணாம்பு கலந்த பொருளையே (முத்துவெள்ளை என்பார்கள்) பாவித்தார். அதை பூசியபின் நேரம் செல்லச்செல்ல பூச்சு காய்ந்து கொண்டேபோகும், நாடி. நரம்புகளெல்லாம் பற்றி இழுப்பதுபோல, எனக்கு இருந்தது. தலைநகர் நாடகங்களில் எங்கள் ஒப்பனை என்பது மெல்லிய பூச்சுதானே.

பட்டுச்சேலையால் தார்ப்பாய்ச்சி உடுத்தி, கண்இமைக்கு கீழான சிறுபகுதி, உதடுகள், உள்ளங்கை, உள்ளங்கால் (இவற்றுக்கு சிவப்பு வர்ணமும்) இவை தவிர்ந்த, உடம்பின் மேற்பகுதி, கெண்டைக்கால் என்று முழுவதும் பச்சை வர்ணத்தால் பூசிவிட்டார்கள். நீலவண்ணன் அல்லவா.. எதற்கு பச்சை நிறம் என்று கேட்டதற்கு, நீலம் பூசினாhல் மின்சாரஒளியில் நிறபேதம் அடைந்து கறுப்பாகத்தெரியுமாம். ஆனால் பச்சை வர்ணம், அப்படி பேதமடையும்போது நீலவண்ணம் காட்டுமாம் என்றார்கள். அது உண்மையாகத்தான் இருந்தது. ஒப்பனை முடிந்தபின் ஏறக்குறைய பஞ்சவர்ணக்கிளி போல இருந்தேன்.

இத்தனையும் போதாதென்று கைகளில் அலங்காரப்பட்டிகள், கழுத்தில் மணிமாலைகளுடன், முழங்கால் வரை தொங்கும் பெரிய மலர்மாலை (நிஜமானதுதான்), கையில் நீண்ட புல்லாங்குழல் (சிறிதாக இருந்தால் ஏதோ குச்சி என்று நினைத்துவிடுவார்களே), கடைசி கடைசியாக மயிலிறகுகள் பொருந்திய கிரீடம் (மட்டையோ, தகரமோ) ஒன்றையும் தலையில் வைத்து விட்டார்கள். ஏதோ என் தலைக்கு அளவாக 'மெத்தென்று' சுகமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மகா. மகா, தவறு. ஆந்த முடி கழன்று விடாமல் இருப்பதற்காக அதில் பொருந்திய கம்பிகளை முறுக்கி இறுகக் கட்டிவிட்டார்கள். சிறிதுநேரத்தில் நெற்றி நரம்புகளெல்லாம் புடைத்து பெரிய தலைவலியே ஆரம்பித்து விட்டது. இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு விடியவிடிய நடைபெற்ற கூத்துகள், இசைநாடகங்கள் என்பனவற்றில் நடித்த எனக்கு முந்திய காலத்து நடிகர்களை ஒருமுறை நினைத்துக்கொண்டேன்.

ஓப்பனையெல்லாம் முடிந்து சககலைஞர்கள் முன்னால் போய் நின்றபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் எனது வேதனையை விரட்டியடித்தன. தென்னிந்திய சினிமாவில் நிரந்தர ராமராக, கிருஷ;ணனாக தோன்றிப் புகழ்பெற்ற என். ரி. ராமராவ், நரசிம்மபாரதி (1948ல் 'அபிமன்யு' படத்தில் கிருஷ்ணராக நடித்தவர். எம்.ஜீ.ஆர் தான் இதில் அருச்சுனன்) ஆகிய இரு நடிகர்களுக்குப் பிறகு, கிருஷணன் வேடம் எனக்கு பொருந்தி வந்திருக்கிறதென்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள். (ரகுநாதன் பத்திரிகைக் குறிப்பொன்றில் பின்னர் இதைக்குறிப்பிட்டிருந்தார்.)

யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி போன்ற இடங்களில் மேடையேறியபோது 'கிருஷ்ணனின் நிரந்தரப்புன்னகையை, உரையாடலை, கள்ளத்தனமான பார்வையை ரசிகர்கள் வரவேற்கவே செய்தார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம்.

தொடர்ந்து 1976ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றம். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த நாடகம் வந்திருக்கிறதென்பதினால் நல்ல கூட்டம். எனக்கு அறிமுகமான பல (கொழும்பு வாழ்) கலைஞர்கள் வந்திருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு நான் இந்த நாடகத்தில்; நடிக்கிறேன் என்று தெரியாது. போதும் போதாதற்கு மீசை இல்லாத முகம், பச்சை வர்ணப்பூச்சு. என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நாடகம் ஆரம்பித்தது. தொடக்கத்தில் இருந்தே நாடகம் பார்வையாளர்களுக்கு பிடித்துப்போயிருக்கவேண்டும். ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான கட்டம். கவிஞர் வைத்தீஸ்வரன் சொன்ன அதே கட்டந்தான். மகாபாரதப்போரை நடத்துவதா, இல்லையா என்பதுபற்றி கண்ணன் பாண்டவர்களின் அபிப்பிராயத்தை ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டுவருகிறார். மதியூகியான சகாதேவனிடம் கேட்டபொழுது, அவன் இப்படிச்சொல்கிறான்.

பாரதப்போர்வராமல் தடுப்பதற்கு உன்னைக் கட்டிப்போட்டால் சரியாகும் என்பதாக கிருஷ;ணனைப் (என்னைப்) பார்த்துச்சொல்கிறான்.

'கண்ணா.. உன்னை கட்டிப்போடுவேன்'

'சகாதேவா.. ஆகட்டும்.. அப்படிச்செய்.. பார்க்கலாம்'

'கண்ணா.. உன்னைவிட இலகுவாக வசப்படக்;கூடிய பொருள் சக்தி வேறு ஒன்றுமில்லை'

என்று சொல்லி சகாதேவன் முழங்காலில் நின்றவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்.

''நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்

பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி

மா பாரதம் அகற்ற மற்ற் ஆர் கொல் வல்லாரே''
– வில்லிபாரதப்பாடல் இது.

(இந்தப்பாடலை மேடையில் பாடியவர் அண்மையில் மறைந்த சிறந்ததொரு பாடகரான திலகநாயகம் போல். சகாதேவனாக நடித்தவர் ஹரிதாஸ். 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தில் நடித்தவர்.)

கிருஷ்ணன் அப்படியே கட்டுண்டு நின்று மந்தஹாசம் செய்கிறார். (மந்தஹாசம் என்ற புன்னகை எப்படி செய்யவேண்டுமென்று இயக்குனர் ரகுநாதன் எனக்கு தனிவகுப்பே நடத்தினார்), அந்தக்காட்சியின் தன்மை, ஒலிக்கும் இனிய பாடல் - நான் மெய்மறந்ததுமாதிரி புன்னகை தவள நிற்கிறேன். அரங்கில் உள்ளவரும் கிறங்கிப்போய் இருக்கிறார்கள்.

முன்வரிசையில் என் பார்வை ஓடுகிறது. கவிஞர் சில்லையூர் செல்வராசன் அருகில் அவரது இளம்மனைவி கமலினி செல்வராஜன். (கமலினி அக்காலத்தில் பிரபல வானொலித்தொடர் நாடகமான 'தணியாத தாக'த்தில் எனது தங்கை கமலியாக நடித்துக்கொண்டிருந்தவர்) என் மனதில் குறும்பான ஒரு எண்ணம் வந்தது.

அதே மந்தஹாசப்புன்னகையுடன் சபையை அரைவட்டத்தில் பார்வையிட்டு வரும்போது, கமலினியைத் தாண்டும்போது கண்களை சிமிட்டினேன். கமலினி திடுக்கிட்டுப்போய் தன் கணவரிடம் (சில்லையூராரிடம்) ஏதோ குனிந்து சொல்வது தெரிந்தது. யாரோ தெரியாதவன் இப்படிச்செய்கிறான் என்று அவர்களுக்கு கோபம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அதேமாதிரி அரைவட்டத்தில் முகம் திரும்பும்போது – அதே கண்சிமிட்டல். அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நாடகம் தொடர்கிறது.

கண்ணன் ஒன்று போல பல வடிவங்களைக் காட்டினான். ஆனாலும் பெரும் ஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தால் மூலவரை அடையாளம் கண்டு, அவரைத் தன் மனதினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

சகாதேவன் மனதின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன், 'கட்டுணடேன் சகாதேவா. உன் அன்புத்தளையில் கட்டுண்டேன். என்னை விட்டுவிடு' என்று கெஞ்சுகிறார்.

':நீங்கள் இப்படிச்செய்தால் விட்டுவிடுகிறேன்.' என்று நிபந்தனை விதிக்கிறான் சகாதேவன்.

'வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வையால் காக்கவேண்டும் நெடுமாலே'

கண்ணன் சொல்கிறார். ஓம்..

(என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு "ஓம்' என்று உரைத்தருளி..)

(இந்த இடத்தில் புலவர் கீரனின் 'வில்லிபாரத சொற்பொழிவு என் ஞாபகத்திற்கு வருகிறது. சகாதேவன் வேண்டுகோளுக்கு கண்ணன் சொன்ன பதில் ::ஓம்' என்றுதான் வில்லிபாரதத்தில் வருகிறது. கூடவே இலங்கைத்தமிழர்களாகிய நாங்கள் 'ஓம்' என்ற அந்தச்சொல்லையே பாவிக்கிறோம் என்று கூட்டிக்காட்டுகிறார்.)

நாடகம் முடிந்ததும், முடியாததுமாக சில்லையூரார் யாரிடமோ கேட்டு கண்ணனாக நடித்தது நான்தான் என்று அறிந்திருக்கிறார். இந்தச்சிக்கல் இப்படி சுமுகமாக முடிந்தாலும் வேறோரு சிக்கல் எனக்காக ஒரு ரசிகர் வடிவில் காத்திருந்தது.

அவர் ஒரு கிருஷ;ணபக்தராக இருக்கவேண்டும்.. 'பளிச்'சென்ற வெள்ளை உடுப்பு அணிந்திருந்தார். 'கண்ணா..உன்னைக் கட்டி அணைக்கப்போகிறேன்' என்று அடம் பிடித்துக்கொண்டு நின்றார். 'ஐயா. எனக்கு ஆட்சேபணை இல்லை.. ஆனால் .உங்கள் வெள்ளை உடுப்பெல்லாம் பச்சையாகி விடுமே' என்று நான் சொல்லித்தான் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கிருஷ்ணனை (என்னை) கட்டி அணைத்து விட்டு 'பச்சைமாமலைபோல் மேனி' யாளனாகச் சென்றார். அவரது வீட்டில் ;வரவேற்பு' எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நாடகத்தில் என்னுடன், பிரபல நாடகாசிரியர் குழந்தை சண்முகலிங்கம் (அருச்சுனன்), ஏ.பிரான்சிஸ் ஜெனம் (குந்தி), ரி.ராஜேஸ்வரன் (சார்த்தகேசி), சிவபாலன் (துரியோதனன்), ஹரிதாஸ் (சகாதேவன்) போன்றோர் அற்புதமாக நடித்தார்கள்.

என்கலைவாழ்வில், மறக்கமுடியாத திருப்பத்திற்கு காரணமானவரை எப்படி மறக்கமுடியும். 'தேரோட்டி மகனை'த்தான் சொல்கிறேன். தேரோட்டி மகனாக (கர்ணனாக) களகச்சிதமாக நடித்து, எங்களையும் இயக்கியவர்;, பவளவிழா நாயகன் ஏ.ரகுநாதன் அவர்கள்தான்.

"சுட்ட பழ்மும் சுடாத மண்ணும்' - ஏ.ரகுநாதன் பவள்விழா (ஜூலை 25, 2010)மலருக்காக எழுதியது)

2 comments:

  1. ஒப்பனைக் நிறவேறுபாடு ... இப்படி நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆமாம்..சரவணன்..அந்த நாடகத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம்தான். உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete